Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராணுவ தளபதி நரவானே நேபாளத்துக்கு 3 நாள் பயணம்

நவம்பர் 04, 2020 06:19

புதுடெல்லி : இரு நாட்டு உறவில் உரசல்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மீண்டும் முந்தைய இணக்கமான சூழலை கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது. தனது நேபாள பயணத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோரை நரவானே சந்திப்பார் என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் நரவானே, நேபாள ராணுவ தலைமையகத்துக்கு செல்வார். நேபாள ராணுவ வீரர்கள் கல்லூரியில் இளம் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றுவார். அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ணசந்திர தாப்பா அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார். கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரிய வழக்கப்படி, நரவானேவுக்கு ‘நேபாள ராணுவ தளபதி’ என்ற கவுரவ பதவியை ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வியாழக்கிழமை வழங்குவார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் அவருடன் நரவானே பேசுவார். பிரதமர் சர்மா ஒலியை நரவானே வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுவார். அது, இரு தரப்பு உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்ததாக இருக்கும் என்றும், நேபாள நாட்டின் புதிய வரைபட பிரச்சினை பற்றி அப்போது விவாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்தியா- நேபாள நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாட்டு எல்லையை திறன்பட நிர்வகிப்பது குறித்தும் தளபதி தாப்பாவுடன் நரவானே விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என கருதப்படுகிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து கடந்த மே மாதத்தில் நேபாளம் புதிய வரைபடம் வெளியிட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு முதல் உயர்மட்ட பயணமாக நரவானே செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரவானே கடந்த மாதம் வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் ஷிரிங்லாவுடன் மியான்மர் நாட்டுக்கு சென்றதற்கு பிறகு, இரண்டாவது ராஜதந்திர பயணமாக நேபாள விஜயம் அமைகிறது.
 

தலைப்புச்செய்திகள்